search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை வேண்டுதல்"

    முத்துப்பேட்டை அருகே மழை வேண்டி அழைப்பிதழ் அச்சடித்து மரங்களுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் மரங்கள் பட்டுபோனதால் திருமணம் நிறுத்தப்பட்டது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் தெற்கு வள்ளிக்குளக்கரை பகுதியில் விநாயகர் கோவில் உள்ளது. இதன் அருகே வேம்பு மற்றும் அரச மரங்கள் நடப்பட்டு வளர்த்து வந்தனர். இந்த வேம்பு-அரச மரத்துக்கு “திருக்கல்யாணம்” நடத்தினால் மழைபெய்யும் என்று கிராமமக்கள் கருதினர்.

    இதனையடுத்து மரங்களின் திருமணத்துக்கு போல ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்பிதழ் அச்சிட்டப்பட்டு வீடுவீடாக விநியோகிக்கப்பட்டது. வரும் 11-ம்தேதி காலை 9மணியிலிருந்து 10.30-க்குள் திருமணம் நடத்த இருந்த நிலையில் அந்த மரத்திலிருந்து சில நாட்களாக இலைகள் உதிர ஆரம்பித்தன. வெயில் தாக்கத்தால் இலைகள் உதிர்கின்றன. விரைவில் மரம் துளிர் விடுமென அப்பகுதியினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஒட்டுமொத்த இலைகளும் உதிர்ந்த பிறகும் மரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி பட்டுப்போன மரத்திற்கு திருக்கல்யாணம் நடத்த முடியாது. அதனால் திருமணத்தை நிறுத்தி விடுவோம் என்று தீர்மானித்தனர்.

    பட்டுப்போன வேம்பு-அரச மரங்களின் அடியில் ஆலோசனை கூட்டம் நடத்திய பக்தர்கள்.

    இதுகுறித்து திருமண ஏற்பாட்டாளர் முத்துசாமி, கிராம முக்கிய பிரமுகர்கள் சிங்கரவேல், அர்ச்சுனன், பக்கிரிசாமி, முருகேசன், சுப்பிரமணியன், வீரப்பாண்டியன், பூபாலன் ஆகியோர் கூறுகையில் சுமார் 58 ஆண்டுகள் பழமையானது. இந்த வேம்பு-அரச மரங்களுக்கு திருமணம் செய்தால் மழை பெய்யும் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தோம். ஒருசேர 2 மரமும் பட்டுப்போய் விட்டன. இது எப்படி நடந்தது என்று புரியவில்லை. எனவே திருமணத்தை நிறுத்தி விட்டோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
    ×